ஜகார்த்தா, நவம்பர்.07-
இந்தோனேசியாவில் பள்ளிவாசலொன்றில் குண்டு வெடித்ததில் 20 குழந்தைகள் உள்பட 54 பேர் காயம் அடைந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் அந்த பள்ளிவாசல் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக ஏராளமானோர் தொழுகைக்காக அங்கு வந்திருந்தனர்.
அனைவரும் தொழுகை செய்து கொண்டிருந்த போது திடீரென குண்டு வெடித்தது. இதன் பாதிப்பு பள்ளிவாசல் அருகில் செயல்பட்டுக் கொண்டிருந்த பள்ளி ஒன்றிலும் எதிரொலித்தது.
குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20 மாணவர்கள் உள்பட மொத்தம் 54 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் அறிந்த போலீசார், மருத்துவக் குழுவினர் உடனடியாக அங்கு சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் பள்ளிவாசலின் ஒலிபெருக்கி அருகில் இருந்து தான் குண்டு வெடித்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்து சில பொம்மைத் துப்பாக்கிகளைக் கைப்பற்றி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். சம்பவத்தை நேரில் கண்ட சிலர், இரு முறை குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகக் கூறி உள்ளனர்.








