பேங்காக், ஜனவரி.14-
தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இன்று காலையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பிரம்மாண்டமான பாரந்தூக்கி இயந்திரமான கிரேன் ஒன்று, ஓடிக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தலைநகர் பேங்காக் நகருக்கு வடகிழக்கே சுமார் 230 கி.மீ தொலைவில் உள்ள Nakhon Ratchasima மாநிலத்தில் Sikhio மாவட்டத்தில் நிகழ்ந்தது.
தலைநகர் பேங்காக்கில் இருந்து Ubon Ratchathani நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில் சுமார் 195 முதல் 208 பயணிகள் வரை இருந்ததாகத் தெரிகிறது.
அதிவேக ரயில் திட்டத்திற்காகப் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பாரந்தூக்கி இயந்திரம், திடீரென நிலைதடுமாறி ரயிலின் மூன்று பெட்டிகள் மீது விழுந்தது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதோடு, சில பெட்டிகளில் தீ விபத்தும் ஏற்பட்டது.
ஆரம்பக் கட்டச் செய்திகளில், பலி எண்ணிக்கை 12 மற்றும் 19 எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது மீட்புப் பணிகள் தொடரத் தொடர உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.








