சீனாவில் உள்ள ஒரு சிறு உணவகத்தின் உரிமையாளர், தனது கடை பிரபலமடைந்து வருவதைத் தடுத்து, வாடிக்கையாளர்கள் வருவதைத் தவிர்க்கக் கோரிக்கை விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் குவாங்டாங் மாகாணம், போஷான் நகரில் 'மோ' என்பவருக்குச் சொந்தமான சிக்கன் பாட் உணவகம் உள்ளது. பாரம்பரிய சீன மருத்துவ மூலிகைகளைக் கலந்து இவர் தயாரிக்கும் உணவு, சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் உணவகத்தின் முன் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்கும் சூழல் உருவானது.
பொதுவாகத் தங்கள் தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். ஆனால், இந்த அதீதக் கூட்டத்தால் கடும் சோர்வடைந்த மோ, சமூக வலைதள பிரபலங்களிடம் ஒரு விசித்திரமான வேண்டுகோளை வைத்துள்ளார்:
தனது உணவகத்தைப் பற்றிப் புகழ்ந்து வீடியோ போட வேண்டாம் என்றும், அப்படிச் செய்தால் தனது "வாழ்க்கை கடினமாகிவிடும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உணவகம் பிரபலமாவதை விரும்பாத அவர், நேர்காணல் ஒன்றில் "தயவுசெய்து யாரும் வராதீர்கள்" என்று வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டார்.
அதிகப்படியான கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் ஒரு நாள் இரவு கடையைச் சுத்தம் செய்யும்போதே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பகிர்ந்த அவரது மகள், தனது தந்தை உடல்ரீதியாக முற்றிலும் தளர்ந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த மனநிலை, சீன இளைஞர்களிடையே பரவி வரும் 'டாங் பிங்' அல்லது 'படுத்துக் கிடத்தல்' என்ற கலாச்சாரத்துடன் ஒப்பிடப்படுகிறது. அதாவது, அதிகப்படியான வேலை மற்றும் சமூக அழுத்தங்களைத் தவிர்த்து, எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே இதன் நோக்கமாகும். இதனாலேயே, இந்த உணவகத்திற்கு "பிரபலமாக விரும்பாத உணவகம்" என்ற செல்லப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.








