ஜெனிவா, டிசம்பர்.11-
மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை மீண்டும் தேடுவதற்கான முயற்சிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட இருப்பதை சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமான IATA வரவேற்றுள்ளது.
அந்த விமானம் மாயமானது தொடர்பான மர்மத்தைக் கண்டறிவதில் உலகளாவிய விமானப் போக்குவரத்து சமூகத்தின் உறுதியானது தொடர்ந்து நிலைத்துள்ளதாகவும் IATA குறிப்பிட்டுள்ளது.
போயிங் 777 ரக விமானம் மாயமானது எப்படி என்பதைக் கண்டறிவது உலகளாவிய விமானப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம் என்று IATA தலைமை இயக்குநர் Willie Walsh தெரிவித்துள்ளார்.
தேடுதலுக்கு உதவும் வகையிலான புதிய நம்பகமான தரவுகளோ அல்லது தொழில்நுட்பங்களோ எதுவாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன், மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐத் தேடும் பணிகளை, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட Ocean Infinity என்ற நிறுவனம் மீண்டும் கையில் எடுத்துள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி முதல், மொத்தம் 55 நாட்களுக்கு இடைவிடாத ஆழ்கடல் தேடுதல் நடவடிக்கையை Ocean Infinity நிறுவனமானது மேற்கொள்ளவுள்ளது.








