ஒட்டாவா, மே.15-
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசித்து வரும் நிலையில், அதற்கேற்றாற் போல, அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் இந்திய வம்சாளியினரான அனிதா ஆனந்த், மனீந்தர் சித்து, ரூபி சஹோதா, ரந்தீப் சாராய் ஆகிய நால்வர் இடம்பெற்றுள்ளனர். அனிதா ஆனந்த் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த முறை தொழில்துறை, அறிவியல் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சராக 57 வயது அனிதா ஆனந்த் பதவி வகித்து வந்தார்.
மனீந்தர் சித்து அனைத்துலக வர்த்தகத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக வரி உயர்வு அச்சுறுத்தலை மேற்கொண்டு வரும் நிலையில், இவரது துறையின் செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான மாநில செயலாளராக ரூபே சஹோதா நியமிக்கப்பட்டுள்ளார். 44 வயதான அவர் 2015ம் ஆண்டு முதல் பிராம்ப்டன் வடக்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.
அனைத்துலக மேம்பாட்டுக்கான மாநில செயலாளராக ரந்தீப் சாராய் தேர்வாகியுள்ளார். வெளிநாட்டு உதவி முயற்சிகள் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகளை 57 வயது ரந்தீப் மேற்பார்வையிடுகிறார். அவர் சர்ரே மையம் தொகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4வது முறையாக அவர் எம்.பி.,யாகியுள்ளார்.
கனடாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கார்னேவின் லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் மொத்தம் 22 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.








