பாங்காக், நவம்பர்.09-
தாய்லாந்தில், மலேசியாவைச் சேர்ந்த ஒரு நபர் அரசு அதிகாரி போல நடித்து, ஒரு மூதாட்டியிடம் இருந்து 3.3 மில்லியன் பாட், அதாவது மலேசியப் பதிப்பில் சுமார் 426 ஆயிரம் ரிங்கிட் பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சபா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான டான் என்று அறியப்படும் அந்த நபர், போலி ஆவணங்கள், வீடியோ அழைப்புகள் மூலம் அந்த 70 வயது மூதாட்டியை நம்ப வைத்து, அவரின் வங்கிக் கணக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் சிக்கியுள்ளதாக மிரட்டியுள்ளார்.
இந்த மோசடியால் அச்சமடைந்த பாதிக்கப்பட்ட மூதாட்டி, தனது பணத்தையும் மதிப்புமிக்க பொருட்களையும் "சோதனைக்காக" வழங்குமாறு கூறப்பட்டதன் பேரில், மொத்தம் 3.3 மில்லியன் பாட்டை அந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார். வாக்குறுதியளித்தபடி பணம் திரும்பக் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில், டான் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மோசடிக் கும்பலின் மற்ற உறுப்பினர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.








