ஈரானில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள தாய்லாந்து குடிமக்கள் எந்நேரமும் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம், அங்குள்ள தங்கள் நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது ஈரானில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தாய்லாந்து குடிமக்கள் வசித்து வருகின்றனர். போர்ச் சூழல் தீவிரமடைந்தால் அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான அவசரக்காலத் திட்டங்களைத் தாய்லாந்து தூதரகம் ஏற்கனவே தயார் நிலையில் வைத்துள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவீசின், ஈரானில் உள்ள தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போதைய முக்கிய முன்னுரிமை என்று தெரிவித்தார். மேலும், வான்வெளி மூடப்படும் பட்சத்தில் அல்லது விமான சேவைகள் பாதிக்கப்படும் பட்சத்தில், மாற்று வழிகள் மூலம் குடிமக்களை மீட்பதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் கண்காணித்து வருகிறது.








