புதுடில்லி, செப்டம்பர்.23-
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் தரையிறங்கும் லேண்டிங் கியர் பெட்டியில் ஒளிந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளான்.
நேற்று காலை 11 மணிக்கு ஆப்கானிஸ்தான் விமான நிறுவனமான KAM ஏர் விமானத்தில் சிறுவன் இந்த விபரீத சாகசப் பயணத்தை மேற்கொண்டுள்ளான். 2 மணிநேரம் பயணித்து டெல்லி விமான நிலையத்தை அந்த விமானம் அடைந்த நிலையில் சிறுவனை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர். ஆப்கானிய குர்தாவுடன் அந்தச் சிறுவன் காணப்பட்டான்.
அவன் பத்திரமாக இருந்ததை அதிகாரிகள் உறுதிச் செய்தனர். அதன்பின் சிறுவன் மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில், ஆப்கானிஸ்தான் காபுல் விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்து விமானத்தின் கியர் பெட்டியில் ஏறி ஒளிந்து கொண்டதாக சர்வ சாதாரணமாகத் தெரிவித்துள்ளான்.
ஓர் ஆர்வத்தில் தான் இப்படி செய்ததாக அவன் கூறியதைக் கேட்டு அதிகாரிகளே மலைத்துப் போயினர். அதன் பின் மதியம் 12.30 மணிக்கு அதே விமானத்தில் சிறுவன் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டான்.