மும்பை, ஜனவரி.28-
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கிய போது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும் உயிரிழந்ததாக விமானத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.
பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயற்சித்த போது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமான விபத்துக்குள்ளானது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய அரசியலில் பல்வேறு பரபரப்புகளை உருவாக்கி துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார்.








