யாழ்ப்பாணம், பிப்ரவரி 22 -
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு தமிழ்நாட்டு மீனவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்திருப்பது ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ அத்துமீறி உள்ளே நுழைந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களைத் தாக்குவது, கைது செய்வது, சுட்டுக் கொல்வதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படையால் இதுவரை 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தடுத்து நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 3 பேருக்கு அண்மையில் இலங்கையின் ஊர்க்காவற்றுறை நீதிமன்றம் 3 மாதம் சிறை தண்டனை விதித்தது. தற்போது இந்த 3 மீனவர்களும் சிங்களர் அதிகமாக இருக்கும் வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராமநாதபுரம் ஆட்சியை சந்திக்க நடைபயண போராட்டத்தையும் நடத்தி இருந்தனர். மேலும் இம்மாத இறுதியில் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
தற்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட படகு ஓட்டுநர் ஜான்சன் என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை ஊர்க்காவற்றுறை நீதிமன்றம் ஊர்க்காவல்துறை. அதேநேரத்தில் 18 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.