லண்டன்: மெட்டாவெர்ஸ் எனும் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி இருக்கும் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் பரவலாகி வருகிறது. வருங்காலத்தை AI, VR டெக்னாலஜிகளே ஆளும் என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். சினிமா, வீடியோ கேம்ஸ் என பல தளங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் தற்போது அசுர பாய்ச்சல்களை நிகழ்த்தி வருகிறது.
நாம் வாழ்வது போன்றே நம்மை உணரச் செய்யும் சக்தி கொண்ட கற்பனை உலகத்தை உருவாக்குவது விர்ச்சுவல் ரியாலிட்டி. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'மெட்டாவெர்ஸ்' என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் மெய்நிகர் உலகு இந்த மெட்டாவெர்ஸ். திருமணங்கள், பார்ட்டிகள், சந்திப்புகள், மீட்டிங்குகள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் என மெட்டாவெர்சில் அரங்கேறி வருகின்றன. இந்த மெட்டாவெர்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ கேம் ஒன்றில் தான் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி, விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்துக்கான வழக்கமான உபகரணங்களான வி.ஆர். கண்ணாடி, ஹெட்செட் ஆகியவற்றை அணிந்து மெட்டாவெர்ஸில் களமிறங்கியுள்ளார். அந்தச் சிறுமியின் மெய்நிகர் வடிவமான 'அவதார்' மெட்டாவெர்ஸில் உலவும்போது, அதேபோன்று அவதார்களோடு வந்த ஆண்கள் அந்தச் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.