கிங்ஸ்டன், அக்டோபர்.29-
ஜமைக்காவை சூறையாடிய சூறாவளி மெலிசா, தற்போது கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்த சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
கரிபீயன் தீவுகளில் உள்ள ஜமைக்காவை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சூறாவளி என்றும், 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வர்ணிக்கப்பட்ட மெலிசா சூறாவளி கடுமையாகத் தாக்கியுள்ளது. வலுப்பெற்ற மெலிசா மணிக்கு 300 கிமீ வேகத்தில் ஜமைக்கா மற்றும் அதனை சுற்றியுள்ளத் தீவுகளைத் தாக்கி, பெரும் மழையையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தி உள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜமைக்காவின் சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சூறாவளிக்கு மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவில் 3 பேரும், ஹைதியில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.
ஜமைக்கா முழுவதும் இடைவிடாத கனமழை, சூறாவளியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமே இல்லை. தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.








