பாங்கோக், ஜூலை.28-
தாய்லாந்து தலைநகர் பாங்கோக்கின் பரபரப்பான மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
அந்த மார்க்கெட்டில் வழக்கம் போல் பொருட்களை மக்கள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த மர்ம நபர், அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் பாதுகாவலர்கள் நால்வரும், பெண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மாண்டனர்.
மேலும் ஒருவர் பலத்தக் காயமுற்றார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்துக்கும், கம்போடியாவிற்கும் இடையிலான மோதல்களுக்கும் இச்சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.








