டக்கா, அக்டோபர்.09-
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய அனைத்துலக குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்காளதேசத்தில் ஆட்சியில் உள்ளது. வங்காளதேசத்திற்கு 2026ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பதவி இழந்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தடை விதித்தும், தேசிய அடையாள அட்டையை முடக்கி வைத்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைக் கைது செய்ய அனைத்துலக குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவாமி லீக் ஆட்சி காலத்தில் ஏராளமானோர் காணாமல் போன வழக்கை, நீதிபதி கோலாம் மோர்டுசா மொஜூம்தர் தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட அனைத்துலக குற்றத் தீர்ப்பாயம் விசாரித்தது. இது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது, அவர் வங்காளதேசத்தில் இல்லாத நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புலனாய்வு இயக்குநர் அதிகாரிகள் உள்பட 29 பேருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை இம்மாதம் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அனைத்துலக குற்றத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.