ஒட்டாவா: இந்தியா கனடா இடையே இப்போது மோதல்கள் தொடரும் நிலையில், கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். வீட்டு வாசலில் வைத்து அவரை சிலர் சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர்.
அவரது கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகும். அதன் பிறகு இரு நாடுகளும் தூதர்களைத் திரும்பப் பெறுவது தொடங்கி மாறி மாறி பல நடவடிக்கைகளை எடுத்தன.
இந்தியா கனடா உறவு: இந்தியா கனடா நல்லுறவு என்பது கனடாவுக்கு ரொம்பவே முக்கியமானது. ஏனென்றால் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கனடாவுக்குக் கணிசமான அந்நிய செலாவணி கிடைக்கிறது. அப்படி வரும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்கள் தான் அதிகம். இதன் காரணமாகவே கனடா நாட்டை சேர்ந்தவர்கள் விசா பெற இந்தியா தடை விதித்த போதிலும், கனடா அதுபோல எடுக்கவில்லை.
அந்தளவுக்கு இந்திய மாணவர்கள் கனடா பொருளாதாரத்திற்கு முக்கியம்.. இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே கனடாவில் சென்று படிக்க விண்ணப்பித்துள்ளனர்.