மேட்ரிட்: ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும் என்றும், மறக்க முடியாத நினைவுகளை ஸ்பெயின் நாட்டினரும் அங்குள்ள தமிழர்களும் அளித்தனர் என்று ஸ்பெயின் பயணத்தை முடித்து சென்னை புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெருக்கி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தீவிர முயற்சி கொண்டு இருக்கிறார். அந்த வகையில், கடந்த மாதம் தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். இதையடுத்து, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்றார். முதல்வருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்றார்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். "தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெயின் நாட்டின் தொழில் துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.
நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநாடு அமைந்தது முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். பின்னர் ரோகா குழும இயக்குநர் கார்லோ வெலாஸ்கெஸ் மற்றும் ரோகோ இந்தியா நிர்வாக இயக்குநர் நிர்மல் குமாரை சந்தித்து ரூ.400 கோடி முதலீட்டை தமிழ்நாட்டுக்கு ஈர்த்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.