Oct 17, 2025
Thisaigal NewsYouTube
நேப்பாள அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகல்
உலகச் செய்திகள்

நேப்பாள அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகல்

Share:

கட்மாண்டு, செப்டம்பர்.09-

நேப்பாளத்தில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு உள்ள போராட்டக்காரர்கள், அதிபர் இல்லத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். நாடாளுமனறத்திற்கும் தீ வைத்தனர். இதையடுத்து நேப்பாள அதிபரும் பிரதமரும் ராஜினாமா செய்தனர்.

நேப்பாள நாட்டில் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் பொங்கி எழுந்த இளைய சமுதாயத்தினர் பெரும் போராட்டத்தில் இறங்கினர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த களம் இறங்கிய அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டம் நாடு முழுவதும் பரவிய சூழலில், சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாடு விலக்கிக் கொண்டது. ஆனாலும் கோபம் தணியாத இளைஞர்கள் மீண்டும் இன்றும் போராட்டம், வன்முறையில் களம் இறங்கி உள்ளனர்.

ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளதால் நாடெங்கும் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக், வேளாண் அமைச்சர் ராம்நாத் அதிகாரி, நீர்வளத்துறை அமைச்சர் யாதவ் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டனர்.

பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் விடுத்த வேண்டுகோளை பிரதமர் சர்மா ஒலி நிராகரித்தார். இதையடுத்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

நிலைமை கட்டுக்கடங்காத நிலையில் போராட்டக்காரர்கள் அதிபர் ராம் சந்திரி பவுடெல் இல்லத்தைச் சூறையாடி இருக்கின்றனர். ராஜினாமா செய்த உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர்கள் புஷ்பகமல் தாஹல் என்னும் பிரசந்தா மற்றும் ஷேர் பகதூர் டியுபா, எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோர் இல்லங்களும் போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து தப்பவில்லை. முன்னாள் பிரதமர் ஒருவரின் மனைவி மீதும் தீ வைத்து எரித்தனர். அமைச்சர்கள் பலரும், ராணுவ ஹெலிகாப்டர்களில் மீட்கப்படுகின்றனர். அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

நாட்டின் பல பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் சர்மா ஒலி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் ராம் சந்திரி பவுடெலும் ராஜினாமா செய்தார். அமைச்சர்கள் அனைவரையும் பதவி விலகும்படி ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.

Related News