அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றத்திற்கு இடையே, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான 'ஹார்முஸ் நீரிணையை' ஈரான் மீண்டும் மூடியுள்ளது.
லெபனானில் போர்நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று இப்பாதை திறக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே மீண்டும் மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்வதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
நீரிணை மூடப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் இந்திய மற்றும் சீனக் கப்பல்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறின. சில டேங்கர் கப்பல்கள் நடுவழியில் திரும்பின.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ட்ரம்ப் வலியுறுத்தி வரும் நிலையில், "எங்கள் யுரேனியத்தை எங்கும் மாற்ற முடியாது" என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உலக எரிபொருள் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை விநியோகிக்கும் இந்த வழித்தடம் மூடப்பட்டதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.








