ஜெய்ப்பூர், அக்டோபர்.14-
ராஜஸ்தானில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய் சால்மரில் உள்ள தையாத் பகுதியில் உள்ள ராணுவ நிலையம் அருகே பயணிகள் 57 பேருடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பேருந்தில் இருந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 10 பேர் துடிதுடித்து தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேலும், 16 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அருகிலுள்ள ராணுவப் போர் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.