புதுடில்லி, நவம்பர்.26-
டில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் வழக்கில் 7வது நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
டில்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில், நவம்பர் 10ம் தேதி உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கில் பரிதாபாத்தை சேர்ந்த சாஹிப் என்ற 7வது நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்த்திய சதிகாரன் டாக்டர் உமர் நபிக்கு தங்கும் இடம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலை படை தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை சாஹிப் வீட்டில் தான் தங்கியுள்ளான் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய மற்றவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.








