ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம், கீலாங் பகுதியில் அமைந்துள்ள விவா எனர்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதன்கிழமை நள்ளிரவில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்களுடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 13 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்ட போதிலும், இந்த விபத்து அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் victoria மாகாணத்தின் 50 சதவீத எரிபொருள் தேவையையும், ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் 10 சதவீத எரிபொருள் தேவையையும் பூர்த்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தினால் பெட்ரோல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஈரான் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழலில், இந்தத் தீ விபத்து ஆஸ்திரேலியாவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலை ஏற்கனவே இரட்டிப்பாகியுள்ள நிலையில், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் பீதியடைந்து எரிபொருளைச் சேமிக்கத் தொடங்கியுள்ளதால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. விபத்தின் போது பணியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பெட்ரோல் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகலாம் என அஞ்சப்படுகிறது.








