ஹைதராபாத், ஜூலை.14-
இந்திய பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவன் பாருபள்ளி காஷ்யப்பை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களின் 7 ஆண்டு கால திருமண பந்தம் முடிவுக்குக்கு வந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடாமியில் பயிற்சி பெற்ற சாய்னா நேவாலும் பாருபள்ளி காஷ்யப்பும் இந்திய அணியின் பூப்பந்து போட்டியில் சிறந்து விளங்கினர்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவால், உலகின் முதல் நிலை வீராங்கனையாகவும் திகழ்ந்தார். அதே போல, காஷ்யப்பும் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்குத் தங்கம் வென்றார். அனைத்துலக போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். அதன் பிறகு, காஷ்யப் கொடுத்த பயிற்சியில் சாய்னா நேவால் சிறப்பாக விளையாடினார். இருவருக்கும் காதல் ஏற்பட்டு 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், பாருபள்ளி காஷ்யப்பை விட்டு பிரிவதாக சாய்னா நேவால் அறிவித்துள்ளார். நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, நானும், பாருபள்ளி காஷ்யாப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி மற்றும் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுத்ததற்கு நன்றி என சாய்னா தமது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.








