வாஷிங்டன், அக்டோபர்.19-
அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து போராட்டம் வெடித்தது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அப்போது அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றினார். அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். அடுத்ததாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு வெளிநாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கும் விதித்தார்.
அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது, சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது. திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவு, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய முடிவுகளையும் டிரம்ப் எடுத்துள்ளார்.
டிரம்ப் பதவியேற்றதில் ஏராளமான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவி திட்ட நிதியை பெருமளவு குறைத்துள்ளார்.
டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் வெடித்தது. இங்கு யாரும் மன்னர் இல்லை என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 2500க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர் என ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.