தோக்யோ, செப்டம்பர்.07-
ஆளும் கட்சியில் பிளவு ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன் ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாக ஷிகெரு இஷிபா அறிவித்துள்ளார். இஷிபா, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார். கடந்த ஜூலை மாதம் நடந்த பார்லியின் மேலவைத் தேர்தலில் இந்த கட்சிக்கு தோல்வி கிடைத்தது. இதனால் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்து விட்டது.
இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக இவ்வாறு கூறப்படும் கருத்துக்களை பிரதமர் புறக்கணித்து வந்தார். ஆனால், நாளுக்கு நாள் அவரது ராஜினாமாவை கோரும் குரல்கள் வலுத்து வருகின்றன.
குறிப்பாக, அவரது கட்சியில் இருக்கும் வலதுசாரிகள், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், கட்சி தலைமைப் பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாமா என்பது பற்றி நாளை லிபரல் டெமாக்ரடிக் கட்சி முடிவு செய்ய உள்ளது.
அதை கட்சியின் நிர்வாகிகள் அங்கீகரிக்கும் பட்சத்தில், ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டியிருக்கும். அதை தவிர்க்கும் நோக்கத்தில், அவர் தானாகவே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.