சிங்கப்பூர், டிசம்பர்.24-
சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மலேசியர்களின் தண்டனையை நிறுத்தக் கோரும் பல்வேறு வழக்குகளில், அவர்களின் குடும்பத்தினர் சார்பில் வாதாடி வந்தவரான சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ரவி காலமானார்.
ரவி மாடசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட 56 வயதான ரவியின் மரணம், இயற்கைக்கு மாறானது என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் சிங்கப்பூரைச் சேர்ந்த ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
என்றாலும், அவரது மரணம் குறித்த உண்மையான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த ரவி, பல சர்ச்சைகளில் சிக்கியவர்.
மனித உரிமை வழக்குகளில் முன்னிலை வகித்து வாதாடுவதிலும், இலவச சட்டச் சேவைகள் வழங்குவதிலும் பிரபலமான ரவி, ஓரின மற்றும் மாற்று பாலின சமூகத்தின் ஆதரவாளராகவும் செயல்பட்டு வந்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு Bipolar disorder என்ற இருமுனை கோளாறுக்கான சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு, தொடர்ச்சியான குற்றங்களுக்காக அவருக்கு 14 வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








