ஏதென்ஸ், ஆகஸ்ட்.19-
கிரீஸ் நாட்டுத் தீவான கோர்பூவில் இருந்து ஜெர்மனியின் டூசல்டார்ப் நகருக்குப் புறப்பட்ட விமானமொன்று நடுவானில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த, 281 பயணிகளும் விமானப் பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த, 'காண்டோர்' விமான நிறுவனத்தின் விமானம், கிரீஸின் கோர்பூவில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில், நடுவானில் பறந்த போது, திடீரென இயந்திரத்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவசரமாகத் தரையிறங்க இத்தாலியின் பிரின்டசி விமான நிலையம் அனுமதி அளித்தது. தீப்பற்றிய நிலையிலேயே, ஒரு மணி நேரம் பயணித்த விமானம், இத்தாலியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதில் பயணித்த அனைத்து 281 பேரும் உயிர் பிழைத்தனர். அவர்களில் 273 பயணிகள். எஞ்சிய எண்மர் விமான ஊழியர்கள் ஆவர்.