பாக்தாத், ஜூலை.18-
ஈராக்கில் புதிதாகத் திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 61 பேர் பலியாகினர். மாயமான 11 பேரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மேற்காசிய நாடான ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள அல் - கூட் நகரில், கடந்த வாரம் புதிதாக வணிக வளாகம் ஒன்று திறக்கப்பட்டது.
பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள இந்த ஐந்து மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்தாவது மாடியில் பற்றிய தீ, மளமளவென பிற தளங்களுக்கும் பரவியது.
இதனால், வணிக வளாகத்துக்கு வந்திருந்தோர் அலறியடித்தபடி வெளியேறினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதில் வணிக வளாகத்தில் இருந்த 61 பேர் பலியாகினர். இதில், 14 பேரின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவிற்குக் கருகியது.
மீதமுள்ளோர், கடும் புகையால் மூச்சுத் திணறி பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடும் புகை மூட்டத்தில் சிக்கித் தவித்த 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்தில் சிக்கி மாயமான 11 பேரை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.








