கெய்ரோ, செப்டம்பர்.03-
சூடானின் டார்பரில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு கிராமமே மண்ணில் புதைந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஐயுறப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு பகுதியான டார்பரில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில், தராசின் என்ற கிராமம் மண்ணில் புதைந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுவதாக அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர் குழுவான சூடான் விடுதலை இயக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
சடலங்களை மீட்க உதவுமாறு ஐ.நா. மற்றும் சர்வதேச உதவிக் குழுக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிரிக்க நாட்டின் அண்மைய வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான இயற்கைப் பேரழிவாகும்.
சூடானின் ராணுவத்திற்கும், அதன் துணை ராணுவப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள மர்ரா மலைகள் உள்ளிட்ட டார்பர் பிராந்தியத்தின் பெரும் பகுதிகளை, ஐ.நா., மற்றும் உதவிக் குழுக்கள் அணுக முடியாத நிலை உள்ளது.